Sunday, September 29, 2024
Home » கடம்பூர் மலைப்பகுதியில் 10 மாதங்களாக விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த ‘கட்டையன்’ யானை மயக்க ஊசி செலுத்தி பிடிபட்டது!!

கடம்பூர் மலைப்பகுதியில் 10 மாதங்களாக விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த ‘கட்டையன்’ யானை மயக்க ஊசி செலுத்தி பிடிபட்டது!!

by Porselvi

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் பிடிபட்ட ‘கட்டையன்’ யானை மங்களப்பட்டி வனத்தில் விடுவிக்கப்பட்டது.கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. கடந்த சில மாதங்களாக கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கடம்பூர், அத்தியூர், பவளக்குட்டை, ஏலஞ்சி, நடூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பகல் நேரங்களில் ஒற்றை காட்டு யானை நடமாடி வருவதோடு, பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த யானையின் தந்தம் விறகுக்கட்டை போல் காட்சியளிப்பதால் இந்த யானைக்கு மலை கிராம மக்கள் கட்டையன் என பெயர் வைத்துள்ளனர். பகல் நேரங்களில் கட்டையன் யானை விவசாய விளை நிலங்களில் நடமாடுவதால் மலை கிராம மக்கள் அன்றாடம் தங்களது விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

கட்டையன் யானையை வனத்துறையினர் பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏலஞ்சி கிராமத்தில் வனத்துறையினரின் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கட்டையன் யானையை பிடிப்பதற்காக உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டதையடுத்து தற்போது யானையை பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த யானையை கும்கி யானைகளை பயன்படுத்தாமல், மருத்துவ குழுவினர் மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டுள்ள வனத்துறையினர் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் (பொ) வெங்கடேஷ் பிரபு தலைமையில் 50 பேர் அடங்கிய குழுவினர் கடம்பூர் மலைப்பகுதியில் முகாமிட்டனர். மேலும், யானையை பிடிப்பதற்காக முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிலிருந்து யானை பிடிக்கும் அனுபவம் உள்ள நான்கு பேர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து கடம்பூர் மலைப்பகுதியில் கட்டையன் யானை எந்த இடத்தில் முகாமிட்டுள்ளது என்பது குறித்து வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், நேற்று மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்துள்ளனர். பவளக்குட்டை என்ற இடத்தில் வனத்துறை அதிகாரி சதாசிவம் 4 மயக்க ஊசிகளை செலுத்தி யானையை மயக்கம் அடைய செய்தார். அதன்பின் பிரத்யேக ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் மூலம் யானையை மங்களப்பட்டி வனத்தில் விடுவித்தனர்.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi