புதுடெல்லி: இன்டர்நெட்டில் பரவும் ‘அகிரா’ எனும் புதிய ரான்சம்வேர் வைரஸ் மூலம் கணினியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன் மூலம் பணம் பறிக்கும் செயல்கள் நடப்பதாக ஒன்றிய சைபர் பாதுகாப்பு ஏஜென்சியான சிஇஆர்டி எச்சரித்துள்ளது. ஒன்றிய இணைய பாதுகாப்பு நிறுவனமான சிஇஆர்டி நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘அகிரா என அழைக்கப்படும் ரான்சம்வேர் வைரஸ் இன்டர்நெட்டில் வேகமாக பரவி வருகிறது. இந்த குழு, இன்டர்நெட் வாயிலில் கணினியில் உள்ள தகவல்களை திருடி, அவற்றை என்கிரிப்ட் செய்து, அந்த தகவல்களை திரும்ப பெற பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணத்தை தராதபட்சத்தில் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் டார்க் வெப் பிளாக்கில் கசியவிடுகின்றனர். குறிப்பாக, இந்த அகிரா வைரஸ் வின்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் கணினிகளை குறிவைக்கிறது. இதுபோன்ற வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஆன்லைன் பாதுகாப்பு நெறிமுறைகளை பயனர்கள் கடைபிடிக்க வேண்டும். ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட வேண்டும்’ என அறிவுறுத்தி உள்ளது.