சென்னை: வீட்டின் முதல் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, பால்கனியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் திருவல்லிக்கேணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவல்லிக்கேணி பள்ளப்பன் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் (36), டீக்கடை ஊழியர். இவரது மனைவி லட்சுமி. தம்பதிக்கு, நிதிஷ், நிதேஷ் என 4 வயதில் இரட்டை குழந்தைகள். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனியில் இரண்டு மகன்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டில், லட்சுமி சமையல் வேலை செய்து ெகாண்டிருந்தார். அப்போது நிதிஷ் மட்டும் பள்ளப்பன் தெருவில் செல்லும் வாகனங்களை பால்கனியில் உள்ள கம்பியின் மீது ஏறி நின்று, எட்டி பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென கால் தவறி நிதிஷ் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தான். இதில் தலையில் பலத்த காயம் மற்றும் உடலில் எலும்பு முறிவுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினான். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது தாய் லட்சுமி அலறி அடித்துக்கொண்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு நிதிஷிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி நிதிஷ் உயிரிழந்தான். இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் திருவல்லிக்கேணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.