ஈரோடு, ஜூலை 22: கீழ்பவானி வாய்க்காலில் அட்டவணைப்படி ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சீரமைப்பு பணிகளை முடிக்க விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா கேட்டுக்கொண்டுள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளுக்கு பதிலளித்து கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பேசியதாவது: கீழ்பவானி வாய்க்காலில் அட்டவணைப்படி ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்க ஏற்கனவே நீர் வளத்துறை திட்டமிட்டு அதற்காக சீரமைப்பு பணிகளை விரைந்து செய்து வருகின்றது.
சீரமைப்பு பணிகள் தடையின்றி நடக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பல இடங்களில் பணியை நிறுத்துவது, பிரச்னை செய்வது என இருந்தால் தண்ணீர் திறப்பதில் தாமதமாகிவிடும். இன்று கூட சில இடங்களில் பணியை தடுத்துள்ளனர். அனைத்து தரப்பு விவசாயிகளும் சீரமைப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினால் 12ம் தேதிக்குள் சீரமைப்பு பணிகளை நிறைவு செய்து திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கலாம். இவ்வாறு பேசினார்.