சென்னை: அநியாயங்களை நிறுத்துங்கள்; அதிகாரம் உள்ளவர்கள் களமிறங்குங்கள்; இன்னும் மணிப்பூர் இந்தியாவில்தான் இருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். மணிப்பூரில் கேங்போக்பி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 4ம் தேதி குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் ஆடைகளை களைந்து சாலையில் இழுத்து சென்றனர். அங்கு அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை தடுக்க சென்ற அந்த பெண்களின் தந்தை, சகோதரர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க செய்தியில்,
தெய்வம் என்பார் பெண்களை;
தேவி என்பார் பூமியை;
கடவுளின் பாகம் என்பார்
பார்வதியை
நடைமுறையில்
உடல் உரிப்பு செய்து
ஊர்வலம் விடுவார்
நம் தலையில் அல்ல
காட்டுமிராண்டிகளின்
தலையில் அடிக்க வேண்டும்
அநியாயங்களை நிறுத்துங்கள்;
அதிகாரம் உள்ளவர்கள்
களமிறங்குங்கள்
இன்னும் மணிப்பூர்
இந்தியாவில்தான் இருக்கிறது
என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.