செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில் 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி, கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன் தினம் குண்ணவாக்கம் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், குண்ணவாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த அமல்ராஜ் (36) என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அமல்ராஜ் மீது 2 கொலை வழக்கு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அமல்ராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.