திருமலை: ஆந்திர மாநிலத்தில் 1 கிலோ தக்காளி ரூ.120க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில், அனகாப்பள்ளி மாவட்டத்தில் நுகாலம்மா அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அதேபகுதியை சேர்ந்த ஜக்கா அப்பாராவ்-மோகினி தம்பதியின் மகள் பவிஷ்யாவுக்கு வேண்டுதல் நிறைவேறினால் தங்க நகை காணிக்கையாக கொடுப்பதாக வேண்டிக்கொண்டனர். தம்பதிகளின் விருப்பம் நிறைவேறியதால் தற்போது தங்கத்திற்கு நிகராக தக்காளி உள்ளதால் அதனை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இதற்காக, நேற்று முன்தினம் 51 கிலோ தக்காளியுடன் வெல்லம் மற்றும் சர்க்கரையுடன் எடைக்கு எடை காணிக்கையாக வழங்கினர். இதற்கிடையே, அனகாப்பள்ளி நுகாலம்மா கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தக்காளி துலாபாரத்தை காண அப்பகுதிமக்கள் திரண்டனர். சிலர் தக்காளி எடை எடைக்கு காணிக்கை வழங்கியதை தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.