சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சார்பில் தயாராகும் பணிகள், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே, மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி மாநாடு நடத்தப்பட்டும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் தற்போது வேகமெடுக்க தொடங்கி உள்ளன. இந்தநிலையில் தான், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாடு குழுவுடன் ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டத்தில், மாநாடு ஒருங்கிணைப்பு குழு, விழா மலர் குழு, கூட்ட அரங்கம் அமைக்கும் குழு உள்ளிட்ட குழுக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன. ஏற்கனவே, மாநாடு தொடர்பான அழைப்பினை தொண்டர்களுக்கு கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு மட்டுமின்றி பாஜ தரப்புக்கும் தனது பலத்தை நிரூபிக்கும் வண்ணம் பல்வேறு திட்டங்களை மாநாடு மூலமாக வெளிப்படுத்த உள்ளதாக அதிமுக வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.