தர்மபுரி : தர்மபுரி நகரில் உள்ள ஓட்டல், டீக்கடைகளில் வடை உள்ளிட்ட பலகாரங்களை, இனி வாழை இலையில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அறிவுரை வழங்கினார். தர்மபுரி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் அலுவலர்கள், நேற்று தர்மபுரி பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள சீனிவாச ராவ் தெரு, முகமது அலி கிளப் ரோடு, ஆறுமுக ஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, பென்னாகரம் ரோடு ஆகிய இடங்களில் உள்ள டீக்கடை, பலகார கடைகளில், திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, பொதுமக்களுக்கு வடை, போண்டா மற்றும் பஜ்ஜி உள்ளிட்ட பலகாரங்களை, பழைய நாளிதழ்களில் வைத்து வழங்குவதை கண்டனர். இதையடுத்து, பலகாரங்களை வாழை இலை, பேப்பர் பிளேட்டுகளில் மட்டுமே வைத்து வழங்க வேண்டும். மேலும், பலகாரங்களை தயாரிக்கும் எண்ணையை தினமும் புதிய பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றி லைசென்ஸ் எடுக்க வேண்டும் என, அதிகாரிகள் கடைக்காரர்களிடம் அறிவுறுத்தினர்.