சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளது. விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்குதல் தொடர்பாக ரேஷன் கடைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ரேஷன் கடையில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டை எண்ணிக்கை அடிப்படையில் விண்ணப்பங்களை பெற வேண்டும். தெரு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பங்களை வீடுகளுக்கு சென்று விற்பனையாளர் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.