தார் எஸ் சலாம்: ஒன்றிய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் தான்சானியாவுக்கு 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அந்நாட்டின் வெளியுறவுதுறை அமைச்சர் ஸ்டெர்ஜோமெனாவை நேற்றுமுன்தினம் சந்தித்து பேசினார். பின்னர் இந்திய-தான்சானியா கூட்டு ஆணைய கூட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது.
வர்த்தகம், முதலீடு,விவசாயம்,பாதுகாப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன ’’ என்றார். முன்னதாக அந்நாட்டின் அதிபர் சமியா ஹசனை ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பாதுகாப்பு, கடல்சார் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.