திருப்போரூர்: தண்டலம் ஊராட்சியில் ரூ.1.85 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதயவர்மன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருப்போரூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்க ஒன்றிய பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து, ஒன்றியக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, புதிய தார்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தண்டலம் ஊராட்சியில் நடைபெற்றது.
தண்டலம் ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ரா தட்சிணாமூர்த்தி வரவேற்றார். திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதயவர்மன் கலந்துகொண்டு, ரூ.1.85 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தண்டலம் ஊராட்சி வார்டு உறுப்பினர் நலிதா பிரகாஷ், திமுக செயலாளர் இரவிக்குமார், திமுக நிர்வாகிகள் பாலாஜி, திருமாவளவன், கஜேந்திரன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.