மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் ப்ரனீத் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் மதுராந்தகம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவசக்தி தலைமையில் தனிப்படை அமைத்து தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட நபர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில், மதுராந்தகம் அய்யனார் கோயில் ஜங்ஷன் அருகே நேற்று முன்தினம் இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சேதுபதி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக், மதுராந்தகம் பகுதி லோகேஸ்வரன், சரண் ஆகியோரை போலீசார் பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர்.
இதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததில், மேற்படி நபர்கள் செங்கல்பட்டு மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து நான்கு பட்டாகத்தி, 6 செல்போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. பின்னர், அவர்களை சிறையில் அடைந்தனர்.