மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொழில்நுட்பக்கல்லூரியில் முதலாமாண்டு துவக்க விழா, கல்லூரியின் விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். முதலாமாண்டு துறைத்தலைவர் நித்யானந்தம் வரவேற்றார். விழாவில், சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் அருள்பிரகாஷ் கலந்துகொண்டு கல்வியின் உயர்வினையும், ஒழுக்கத்தின் சிறப்பினையும், இன்றைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதையும் என்பதை எடுத்துரைத்தார்.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த வாரியத்தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கம்ப்யூட்டர் பிரிவு மாணவன் துரைராஜ் செலுத்திய கல்வி கட்டணத்தை கல்லூரி தாளாளர் செந்தில்குமார் காசோலையாக வழங்கி பாராட்டினார். விழாவில், துறைத்தலைவர்கள் வெங்கடசுப்பரமணியன், இளவழகன், பிரபு, ஆதிகேசவன், நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன், கண்காணிப்பாளர் பட்டு, ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், ஆய்வக ஊழியர்கள், உள்ளிட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக கம்ப்யூட்டர் துறை தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.