சென்னை: திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.15,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முன்னாள் முதல்வர் கலைஞரால் 2000ம் ஆண்டு முதல் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவ, மாணவியர்களுக்கு குறள் பரிசு வழங்கும் திட்டம் தோற்றுவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆண்டுதோறும் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 812 மாணவச் செல்வங்களுக்கு குறள் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி முதல் குறள் பரிசுத் தொகையை ரூ.10,000 லிருந்து ரூ.15,000ஆக உயர்த்தி வழங்க ஆணையிட்டார்.
அந்த வகையில், 2022-23ம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுள், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் நாகராஜன், மாணவி விசாலாட்சி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஹேம்நாத், சந்தோஷ், மாணவிகள் நிவேதா, காவ்யா, லோகிதா, லக்க்ஷனா, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் சந்தோஷ் ஆகிய 9 மாணவ, மாணவியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பரிசுத் தொகை தலா ரூ.15,000க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.