தேனி: தேனியில் உள்ள மின்னணு வாக்கு இயந்திர கிட்டங்கியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவினை சரிபார்க்கும் இயந்திரங்கள் டிஆர்ஓ முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 2024ம் ஆண்டு நடக்க உள்ளது. இத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 180 வாக்குப்பதிவு கண்ட்ரோல் யூனிட் எனப்படும் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வாக்குப்பதிவினை சரிபார்க்கும் விவிபேட் எனப்படும் 490 வாக்குப்பதிவினை சரிபார்க்கும் இயந்திரங்களும் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கிட்டங்கிக்கு கொண்டு வரப்பட்டன.
இதனையடுத்து இயந்திரங்களின் விபரங்களை பதிவேற்றம் செய்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கிளல் இந்திய தேர்தல் ஆணைய ஆணை மற்றும் நடைமுறைகளை பின்பற்றி, தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், நேற்று கிட்டங்கியில் இயந்திரங்கள் வைக்கப்பட்டன. இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, தேர்தல் வட்டாட்சியர் சுகந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.