புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம், நேதாஜி நகரை சேர்ந்தவர் பிரதாப். இவரது மனைவி சோனியா (27). கடற்கரை மற்றும் பாரதி பூங்காவில் குழந்தைகள் விளையாடும் ெபாருட்களை விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு, நேரு வீதியில் பூச்செண்டு விற்பனை செய்யும் கடை வாசலில் கடைசியாக பிறந்த ஆதித்யா என்ற இரண்டு மாத குழந்தையுடன் சோனியா தூங்கியுள்ளார். நள்ளிரவு 1 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுந்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை.
புகாரின்படி பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு பெண் ஆண் போன்று உடையணிந்தும், முகத்தில் மங்கி குல்லா போட்டபடி வந்து குழந்தை ஆதித்யாவை தூக்கி சென்றது பதிவாகி உள்ளது. மற்றொரு சிசிடிவி காட்சியில், அந்த பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு ஒரு ஆண் நபருடன் டூவீலரில் செல்வதும் தெரியவந்ததுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது