ஷாஹரன்பூர்: உபியில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது இடுப்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. 2020ம் ஆண்டு ஆசாத் சமாஜ் என்ற கட்சி தொடங்கப்பட்டது. பீம் ஆர்மி என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் தலைவராக சந்திரசேகர் ஆசாத் செயல்பட்டு வருகிறார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான பீம் ஆர்மி அமைப்பு பங்கேற்றது.
இந்நிலையில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஹரன்பூர் மாவட்டம் தியோபந்தில் உள்ள இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சந்திரசேகர் ஆசாத் நேற்று மாலை காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மற்றொரு காரில் வந்த நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சந்திரசேகர் ஆசாத் இடுப்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த சந்திரசேகர் ஆசாத் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு காரில் தப்பிச்சென்ற கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை துப்பாக்கியால் சுட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் அரியானா பதிவு எண்ணைக் கொண்டிருந்தது. எனவே அந்த காரில் வந்த கும்பல் தப்பிச்செல்லாதபடி அங்கு எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.மேலும் பக்கத்து மாவட்ட போலீசாரும் தேடும் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.