இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், பாகிஸ்தானுக்கு விடுவிக்க வேண்டிய ரூ.20,500 கோடி கடனுக்கான தற்காலிக ஏற்பாடு குறித்து நாணய நிதியம் ஆலோசித்து வருகிறது. கடும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான் 2019ம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்துடன் ரூ.53,340 கோடிக்கான கடனுதவி ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, நாணய நிதியத்தின் சில விதிமுறைகளை பாகிஸ்தான் நிறைவேற்ற முடியாததால் இந்த நிதியை விடுவிப்பதில் பலமுறை சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு நீட்டித்த கடன் வசதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.20,500 கோடி கடனை வழங்குவதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதனையொட்டி, 6 முதல் 9 மாதங்கள் வரையிலான குறுகிய கால கடன் நீட்டிப்பு வசதி திட்டத்தின் கீழ் இந்த நிதியை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் அரசுடன் நாணய நிதியம் கலந்து ஆலோசனை நடத்தி உள்ளது. அதன்படி, குறுகிய கால தற்காலிக ஏற்பாட்டின் கீழ் நிதி விடுவிக்கப்படும் என தெரிகிறது.