சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள், 2 அரசு பி.டி.எஸ். கல்லூரியில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்து இளநிலை மருத்துவ இடங்களும் கலந்தாய்வு மூலம் வருடந்தோறும் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், தமிழகத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் நீட் தேர்வு எழுதியதில் 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 54 சதவீத தேர்ச்சியாகும். இந்த ஆண்டு உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது. எனவே, நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர தயாராகி வருகின்றனர். இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 2023 – 2024ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, பட்டப் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் மூலம் இன்று முதல் ஜூலை 10ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான நிர்வாக ஒதுக்கீடு, என்.ஆர்.ஐ. உள்பட இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. www.tnhealth.tn.gov.in அல்லது www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிகலாம்.