திருவனந்தபுரம்: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி, உடல் நலக்குறைவால் அவதிப்படும் தந்தையை சந்திப்பதற்காக கர்நாடக போலீசின் பலத்த பாதுகாப்புடன் நேற்று கேரளா வந்தார். கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான அப்துல் நாசர் மதானி கடந்த சில வருடங்களுக்கு முன் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவர் விசாரணைக் கைதியாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல் நலம் குன்றிய தந்தையை சந்திக்க கேரளா செல்ல மதானிக்கு உச்ச நீதிமன்றம் 12 நாள் தற்காலிக அனுமதி வழங்கியது. இதற்கான பாதுகாப்பு செலவாக கர்நாடக போலீசுக்கு ரூ.54.63 லட்சம் செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தந்தையை சந்திப்பதற்காக நேற்று மாலை பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் மதானி கொச்சிக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் அவரது சொந்த ஊரான அன்வார்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.