புதுடெல்லி: அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நாள் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத கருப்பு நாள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நள்ளிரவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு நேற்றுடன் 48 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இதைப்பற்றி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் இந்திய ஜனநாயக வரலாற்றில் மறக்க முடியாத கருப்புநாள். நமது அரசியல் அமைப்பு சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானது. அவசரநிலையை எதிர்த்துப் போராடி, நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த பாடுபட்ட துணிச்சல் மிக்க தலைவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.