காரைக்குடி, ஜூன் 24: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இயற்பியல் துறை மற்றும் இந்திய படிக வளர்ச்சி அமைப்பு சார்பில் படிக வளர்ச்சி மற்றும் பயன்பாடுகள் குறித்து தேசிய கருத்தரங்கின் துவக்கவிழா நடந்தது. இயற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் சங்கரநாராயணன் வரவேற்றார். துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், இது போன்ற தேசிய கருத்தரங்குகளின் மூலம் இளையதலைமுறையினர் தங்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ள முடியும். படிகங்கள் இல்லையென்றால் தொழில்நுட்பம் இல்லை.
எலக்ட்ரானிக் உள்பட பல்வேறு சாதனங்கள் ஒற்றைப்படிகங்களால் ஆனவை. ஒற்றை படிகமான சிலிக்கான் மட்டுமே மனிதவளத்தையும், மிகப்பெரிய பொருளாதாரத்தையும் உருவாக்குகிறது. இப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செயல்பாடுகளை மேம்படுத்த தனியாக மேம்படுத்தப்பட்ட அறிவியல் கருவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வக இயக்குநர் முனைவர் ரமேஷா துவக்கிவைத்தார்.
எஸ்எஸ்என் கல்வி நிறுவன ஆராய்ச்சி முதன்மையர் பேராசிரியர் ராமசாமி, அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்லூரி முதன்மையர் பேராசிரியர் ஜெயவேல், வேலூர் விஐடி பேராசிரியர் கலைதநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படிக வளர்ச்சிக்கான பேராசிரியர் ராமசாமி பெயரிலான தேசிய விருது அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவிக்கு வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் முனைவர் சுதாகர் நன்றி கூறினார்.