வேலூர்: ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்புகள் பார்சல் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது அனைத்தும் ஆன்லைன் வர்த்தகமாக மாறியுள்ளது. குண்டூசி முதல் ெபரிய பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. பணத்தை கட்டி ஆர்டர் செய்தால் பொருட்கள் வீடு தேடிவந்து சேர்ந்துவிடுகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சில நேரங்களில் தவறுதலாக வேறு பொருட்கள் டெலிவரி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. சில நேரங்களில் போலியான பொருட்களும் டெலிவரி செய்யப்படுகிறது.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த ஒருவர் ஸ்மார்ட் செல்போன் வாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆன்லைன் வர்த்தகம் மூலம் ₹7,500 மதிப்பிலான செல்போன் வாங்க ஆர்டர் செய்தார். நேற்று அவரது முகவரிக்கு செல்போனை டெலிவரி பாய் ஒரு பார்சலை கொண்டு வந்தார். அந்த பார்சலை திறக்கும் முன்பு ஆர்டர் செய்த நபர் அதனை வீடியோ எடுத்தார்.டெலிவரி பாய் கொடுத்த பார்சலை பிரித்தபோது அதில் பாத்திரங்கள் கழுவும் 3 சோப்புகள் இருந்தது. இதனால் ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அந்த பார்சலில் சார்ஜர் மற்றும் ஹெட்செட் இருந்தது. செல்போனுக்கு பதில் சோப்புகள் இருந்ததால் அவர் ஆர்டரை ரத்து செய்து திருப்பி கொடுத்துவிட்டார்.