மும்பை: மோடியால் தான் பல மாநிலங்களில் பாஜக இருக்கிறது என்று தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் அஜித் பவார் கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் அடுத்த அமல்னேரில் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பேசுகையில், ‘மோடியின் தீவிரமான பணியால்தான் பாஜக வளர்ந்துள்ளது. மோடியால் தான் பல மாநிலங்களில் பாஜக இருக்கிறது. வாஜ்பாய் காலத்தில் கூட பாஜகவுக்கு முழுப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் தற்போது பாஜக பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் மோடி தான்.
அவரிடம் வசீகரம் உள்ளது. ஒரு காலத்தில் நேரு, இந்திரா போன்ற தலைவர்களுக்கு செல்வாக்கு எப்படி இருந்ததோ, அதேபோல் இன்று மோடிக்கு இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே அரசு, பெருமளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளது. ெபரும்பாலான அமைச்சர்கள், பல துறைகளை கவனிக்கின்றனர்’ என்றார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் பேசிய அஜித் பவார், ‘வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்களால் செய்ய முடியாத பணியை மோடி செய்துள்ளார். அவரால் தான் 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது.
1984ம் ஆண்டுக்கு பின், 2014ல் தான் பெரும்பான்மை அரசு அமைந்தது’ என்று கூறினார். மோடியை பாராட்டி ஆதரித்து அஜித் பவார் பேசி வருவதால், அவர் பாஜக பக்கம் சாய்கிறாரா? என்ற அரசியல் பரபரப்புகளும் நடைபெற்று வருகிறது.