திருப்போரூர்: திருப்போரூரை அடுத்த மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி டாட்டியம்மாள் (47), கன்னிவாக்கம் கூட்டுறவு கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 10ம்தேதி மாலை வேலை முடிந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர், அவரிடம் முகவரி விசாரிப்பதுபோல், டாட்டியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி செயினை பறித்தனர். அவர் கூச்சல் போட்டு செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இருப்பினும் சுமார் ஆறரை சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இதுகுறித்து டாட்டியம்மாள் கொடுத்த புகாரின்பேரில், காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட செங்கல்பட்டை அடுத்த பரனூர் கிராமத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான ராஜேஷ் (31) என்பவரை கைது செய்தனர். தங்க நகை மீட்கப்பட்டது. பிறகு திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். நகை பறித்த மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.