சென்னை : சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை வேட்டைநாய்களைப் போல ஏவி விடுவது ஒன்றிய பாஜக அரசின் வழக்கமாக இருந்து வருகிறது என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் , “அரசியல் எதிரிகள் மீது அமலாக்கத்துறை சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை வேட்டைநாய்களைப் போல ஏவி விடுவது ஒன்றிய பாஜக அரசின் வழக்கமாக இருந்துவருகிறது. அரசியல் சட்டத்தையும் மாநில உரிமைகளையும் ஒன்றிய அரசு காலில்போட்டு மிதித்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல். ஒன்றிய அரசின் அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடு இந்த கைது நடவடிக்கையும். தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் எதேச்சதிகாரத்தின் உச்சமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.