மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சயனைட் கலந்த மதுபானத்தை குடித்ததே நேற்று 2 பேர் உயிரிழக்க காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தாலம் வட்டத்தில் உள்ள தத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பட்டறை தொழிலாளர்களான பழனி குருநாதன், பூராசாமி ஆகியோர் நேற்று மாலை மது அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று கொல்லம்பட்டறையில் இருந்து மது பாட்டில்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மது குடித்ததால் தான் இருவரும் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதனிடையே உயிரிழந்த இருவரின் உடல் திருவாரூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இருவரின் மரணம் குறித்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 2 மதுபாட்டில் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் காலி பாட்டிலை சோதனை செய்ததில் அதில் சயனைட் கலந்திருப்பது தெரியவந்தது. திருவாரூரில் பிரேத பரிசோதனை செய்து முடிவு வந்த பிறகு எதனால் இறப்பு ஏற்பட்டது என்பது தெரியவரும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.