திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டரங்கில் காரைக்கால் அம்மையாருக்கு 1,500 பரத கலைஞர்களைக் கொண்டு நாட்டிய சமர்ப்பணம் உலக சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியிடப்பட்டது. பிறகு அவரது பாடலுக்கு ஒரே சமயத்தில் 1,500 பரதநாட்டிய கலைஞர்கள் 30 நிமிட நடனம் ஆடினர். இதனைத்தொடர்ந்து பரதநாட்டிய கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு அரக்கோணம், யுகாஸ் மியூசிக் அண்ட் டான்ஸ் அகாடமி நிறுவனர் கௌசல்யா வினோத்குமார் தலைமை தாங்கினார். கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ பூவை எம்.ஜெகன்மூர்த்தி பங்கேற்று சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். இதில் தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பரதநாட்டிய உதவி பேராசிரியர் மதன்குமார், சென்னை நீதித்துறை நடுவர் ஏ.மாலினி, ஈக்காடு முகமது ரபி, அமுதன், தனக்கோட்டி, கூடப்பாக்கம் குட்டி, முத்துராமன், செஞ்சி ஊராட்சி துணைத்தலைவர் ஜவகர், தொழுவூர் கோபிநாத், குமரேசன், வழக்கறிஞர் பிரகாஷ், வினோத்குமார், ராஜ்குமார், மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.