திருவள்ளூர்: கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உற்சாகமாக பள்ளிக்கு வருகை புரிந்தனர். இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் மங்கள இசையுடன் பன்னீர், சந்தனம் தெளித்தும் கற்கண்டு, ரோஜா பூ கொடுத்தும் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு உற்சாகமாக வரவேற்றனர். மேலும் ஒரு மாதம் கழித்து உடன் படிக்கும் மாணவ, மாணவிகளை பார்த்த உற்சாகத்தில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கைகுலுக்கி கொண்டு உற்சாகமாக வகுப்பறைக்குச் சென்றனர்.
மாணவர்களுக்கு சாகெலெக்ட் இனிப்புகள் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு தங்களுடன் படித்த சக மாணவர்களை நீண்ட நாட்களுக்குப்பின் பின்பு சந்தித்ததில் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். பின்னர் மாணவர்களுக்கு வகுப்பறையில் ஆசிரியர்கள் இந்தாண்டுக்கான பாட புத்தகங்களை வழங்கினர். ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை வட்டத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. கோடை விடுமுறைக்கு பிறகு இந்த கல்வியாண்டுக்காண வகுப்புகள் நேற்று தொடங்கியது.
இதையடுத்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் சக மாணவ, மாணவிகளை கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். இதையடுத்து 9.30 மணியளவில் இறைவணக்கம் நடந்தது. அதன் பிறகு மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். முதல் நாள் பெரும்பாலான மாணவ மாணவியர் பள்ளிக்கு வந்திருந்தனர். ஆசிரியர்கள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டதால் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்திருந்தனர்.
*காவல் துறை எச்சரிக்கை
ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களிடம் கூறும்போது: பள்ளிக்கு பஸ்களில் வரும் மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டோ அல்லது மேற்கூரையின் மீதோ பயணம் செய்யக்கூடாது, மேலும் பள்ளி நேரங்களில் மாணவர்கள் வெளியில் சுற்றக்கூடாது மீறி சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் , மாணவர்கள் தலைமுடியை ஒழுங்காக வெட்டி வரவேண்டும் என எஸ்.ஐ.முருகேசன் தெரிவித்தார்.