ஓவல்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா 2 வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 469 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 173 ரன்கள் பின்தங்கியதுடன் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில்ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து 4வது நாள் ஆட்டத்தில் 270 ரன்கள் எடுத்திருந்த நிலீயல் டிக்ளேர் செய்தது. இதையடுத்து 444 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து இருந்தது. விராட் கோலி 44 ரன்கள், ரஹானே 20 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்காரணமாக ஆஸ்திரேலிய அணி 209 வித்தியாசத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இந்தியா 2 வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.
ஐசிசி தொடர்களின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா அணி படைத்துள்ளது. டி20 (1) மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை (5), சாம்பியன்ஸ் டிராபி (2), டெஸ்ட் சாம்பியன்ஷிப் (1) பட்டங்களை வென்றுள்ளது.