திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து வெங்கத்தூர், மணவாளநகர், போளிவாக்கம், மேல் நல்லாத்தூர், கீழ் நல்லாத்தூர், மப்பேடு உள்ளிட்ட 25 கிராமங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுவந்தது.
இந்தநிலையில், ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் 10 மெகா வோல்ட் மின்மாற்றியை 16 மெகா வோல்ட் மாற்றியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார். இதையடுத்து மணவாளநகர் துணை மின் நிலையத்தில் அமைக்கப்பட்ட 16 மெகா வோல்ட் மின் மாற்றியை தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.கனகராஜன் தலைமை வகித்தார். திருவள்ளூர் உதவி செயற் பொறியாளர் பி.குமார் வரவேற்றார். உதவி செயற்பொறியாளர்கள் ஊத்துக்கோட்டை எம்.சேகர், பெரியபாளையம் எம்.கே.பாலச்சந்திரன், உதவி பொறியாளர்கள் எஸ்.என்.கஜேந்திரன், ரமேஷ், துணை மின் நிலைய உதவி பொறியாளர் ஜோதி முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு 16 மெகா வோல்ட் மின் மாற்றியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், ஒன்றிய செயலாளர் கே.அரிகிருஷ்ணன், முன்னாள் நகர மன்ற தலைவர் பொன்பாண்டியன், கொப்பூர் டி.திலீப்குமார், சி.ஆர்.குமரன், ஆர்.ராஜேந்திரகுமார், ஊராட்சி துணை தலைவர் ஆர்.மோகனசுந்தரம், தாடி நந்தகோபால், வி.எஸ்.நேதாஜி, காஞ்சிபாடி பி.சரவணன், ராமதாஸ், எல்லப்பன், மங்காத்தாகுளம் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.