டெல்லி: வடமாநில தாதாக்கள் – தீவிரவாத கும்பலுக்கும் தொடர்புடைய 122 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தாதாக்கள் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நீரஜ் பவானா கும்பல் உள்ளிட்ட பிற கிரிமினல் கும்பல்களுக்கும், காலிஸ்தான் தீவிரவாத கும்பலுக்கும் இடையிலான தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று பஞ்சாப், அரியானா, சண்டிகர், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களில் 122 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘காலிஸ்தான் தீவிரவாத கும்பலுக்கும், தாதாகளுக்கும் தொடர்புடைய 122 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் மட்டும் 32 இடங்களிலும், பஞ்சாபில் 65 இடங்களிலும், ராஜஸ்தானில் 18 இடங்களிலும், அரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.