ஈரோடு: ‘விதிப்படி சாலைப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு இல்லை’ என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஈரோட்டில் தந்தை பெரியார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: சாலைப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு என்பது கிடையாது. அரசின் விதிகளிலும் பதவி உயர்வு என்பது இல்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 44 நெடுஞ்சாலைத்துறை கோட்டங்கள் உள்ளது.
இதில் கோபி கோட்டத்தில் பணியாற்றி வரும் சில ஊழியர்கள் சங்கம் என்ற பெயரில் வேண்டுமென்றே தங்களது சுய ஆதாயத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு பிறகும் வேலைக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு முறைப்படி தான் பதவி உயர்வு வழங்கப்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு பதவி உயர்வு வழங்கப்படும். இதுவரை பதவி உயர்வு தொடர்பாக அரசுக்கு எந்த மனுவும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.