புதுடெல்லி: காங்கிரஸ் மீது குற்றம்சாட்டும் பிரதமர் மோடியிடம் ஆதாரம் கேட்க தேர்தல் ஆணையத்துக்கு துணிவுண்டா? என மாநிலங்களவை எம்பி கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், கர்நாடக செய்தி தாள்களில் ‘ஆளும் பாஜ அரசின் 2019 முதல் 2023 வரையிலான ஊழல் பட்டியல்’ என்ற பெயரில் காங்கிரஸ் சார்பில் விளம்பரங்கள் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாஜ அளித்த புகாரின் அடிப்படையில், ‘‘விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தொடர்பான ஆதாரங்களை கர்நாடக காங்கிரஸ் தலைவர் அளிக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் ட்விட்டர் பதிவில், “பாஜ மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் காங்கிரசிடம் ஆதாரம் கேட்கிறது. தேர்தல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் பயங்கரவாதிகளுடன் பின்வாசல் வழியாக உறவு வைத்துள்ளதாக பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமரிடம் ஆதாரம் கேட்க தேர்தல் ஆணையத்துக்கு துணிவில்லையா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.