அமராவதி: ஆந்திர மாநிலம் கர்னூலில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூட்டுறவுத்துறை உதவி பணியாளர் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் கிருஷ்ணா நகரில் உள்ள கொட்ட கூட்டுறவு அலுவலகத்தில் உதவி பதிவாளராக பணிபுரியும் பி.சுஜாதா மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து குவிப்பு வழக்கு பதிவுசெய்துள்ளது. கர்னூல் ஸ்ரீராம் நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், கூட்டுறவு அலுவலகம் ஆகியவற்றில் ஏ.சி.பி. அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
இவற்றில் சட்டவிரோதமாக சம்பாதித்து சேர்த்து வைத்த அசைய, அசையா சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வீடுகள், 2.53 ஏக்கர் விவசாய நிலம், கர்னூலை சுற்றி 8 வீட்டு மனைகள், வங்கி லாக்கரில் 50 சவரன் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொத்துக்களின் மதிப்பு ரூ.10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 தினங்களுக்கு முன்பு மாநிலம் முழுவதும் 7 துணை பதிவாளர் அலுவலகம், 2 தாசில்தார் அலுவலகம் திடீர் சோதனை நடத்தி லட்ச கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.