காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கலெக்டர் ஆர்த்தி தலைமையில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைசார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு, வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகளை வழங்கினர். அப்போது, விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு, துறைசார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
பின்னர், வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் 3 விவசாயிகளுக்கு ரூ.3.50 லட்சம் பயிர் கடன், 1 விவசாயிக்கு ரூ.56 ஆயிரம் கால்நடை பராமரிப்பு கடன், 1 விவசாயிக்கு (ரூ.5,800 மானியம்) விசை தெளிப்பான் கருவி ஆகியவற்றை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, மண்டல வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.