தேன்கனிக்கோட்டை, ஏப்.25: தளி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர்நலத்துறை மூலம் 2023-24ம் ஆண்டு நடப்பு காரீப் பருவத்தில் விவசாயிகளுக்கு விதை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தளி வட்டாரத்தில் நடப்பு காரீப் பருவத்தில் விதைப்பதற்கு தேவையான சான்று விதைகள், சிறுதானியங்களான ராகி, சாமை விதை கிராம திட்டத்தில் 50 சதவீத மானியத்தில், பயறு வகைகளான துவரை, காராமணி, உளுந்து போன்ற விதைகள் 60 சதவீத மானியத்திலும், நிலக்கடலை விதைகள் விதை கிராம திட்டத்தில் 60 சதவீத மானியத்திலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, தளி வட்டார விவசாயிகள் விதைப்பதற்கு தேவையான விதைகளை அவரவர் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மூலம் முன்கூட்டியே தளி வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கி விதை நேர்த்தி செய்து பயனடையலாம். விதை நேர்த்திக்கு தேவையான திட, திரவ உயிர் உரங்கள் மற்றும் உயிர் காரணிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.