மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, வங்கதேச தலைநகரம் டாக்கா செல்லும் யுஎஸ் பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்தவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து விமானத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, டாக்கா செல்ல வந்த, ஹையூல் அலி முகமது ஷேக் (28) என்பவர் இந்திய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் வைத்திருந்தார்.
அவர் மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் பரிசோதித்தபோது போலி என தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து தீவிரமாக விசாரித்தனர். அதில், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவிற்குள் சாலை வழியாக ஊடுருவி வந்து, இங்கு ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து, இந்திய போலி பாஸ்போர்ட் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து ஹையூல் அலி முகமது ஷேக்கை கைதுசெய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.