பரமக்குடி: தீத்தொண்டு வார விழாவினையொட்டி பரமக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பாக வழங்கப்பட்டது. 1994ம் ஆண்டு ஏப்.14ம் நாள் மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைக்கும் பணியின் போது உயிரை நீத்த 66 தீயணைப்பு வீரர்களின் நினைவாக இந்தியா முழுவதும் ஏப்.14ம் தேதி தீத்தொண்டு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி பரமக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக பரமக்குடி அரசு கலை கல்லூரியில் பரமக்குடி தீயணைப்புத் துறையின் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில், மாணவ,மாணவிகளுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்(பொ) சிவக்குமார், வணிகவியல் துறை தலைவர் கண்ணன், பரமக்குடி தீயணைப்பு நிலையத்தின் முன்னணி தீயணைப்பு வீரர் சங்கரலிங்கம் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.