திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் மலைக்கோயிலில் பக்தர்களுக்கு வழங்கவும் விற்பனை செய்யவும் பிரசாதம் தயாரிக்கப்படும் சமையல் கூடம் உள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று காலை ஊழியர்கள், சமையல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பொருட்கள் நடுவே சத்தம் கேட்டதால் ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒரு பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடிவந்துவிட்டனர். இதுபற்றி அறிந்ததும் பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன்காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருத்தணி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்துவந்தனர். பின்னர் அவர்கள் சமையல் கூடத்துக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த பெரிய சாரை பாம்பை பிடித்து கோணிப்பையில் அடைத்து கொண்டு சென்றனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்து அடர்ந்த வன பகுதியில் கொண்டுபோய் விட்டனர். பாம்பு எங்கிருந்து வந்தது என்று விசாரிக்கின்றனர்.