வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைபட்டி சேசன்சாவடி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செந்தில்குமார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 11 வயதில் மகளும், 7 மற்றும் 2 வயதில் 2 ஆண் குழந்தைளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கவின் திடீரென மாயமானான். இதுகுறித்து உடனடியாக வாழப்பாடி போலீசில் புகார் அளித்தனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமியுடன் தங்கியிருந்த வெள்ளாளகுண்டத்தை சேர்ந்த பழனியம்மாள் மீது, சந்தேகம் இருப்பதாக தனலட்சுமி தெரிவித்தார். போலீசார், வெள்ளாளகுண்டம் விரைந்து சென்றனர். அங்கு பழனியம்மாள் வீட்டில் குழந்தை கவின் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பழனியம்மாளை கைது செய்த போலீசார், 3 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர். குழந்தையை விற்பனை செய்யும் நோக்கத்தில் கடத்திச் சென்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.