சென்னை: திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வளர்ப்பு நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை போரூரை சேர்ந்த ஆனந்த பத்மநாபன் என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். அவர், நாய்களை வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வந்துள்ளார். இதற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் அசோக் நகரை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறியது. இதையடுத்து, திருமணம் செய்வதாக கூறி அந்த பெண்ணுடன் பலமுறை உறவு வைத்துள்ளார். ஆனால், திருமணம் செய்யவில்லை.
இதையடுத்து, தன்னை ஏமாற்றியதாக அந்த பெண் கொடுத்த புகார் குறித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, ஆனந்த பத்மநாபன் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஹெச்.முகமதுபாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் ஆனந்த பத்மநாபனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.