ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து வெம்பக்கோட்டையில் முதல்கட்ட அகழாய்வுக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் 16ம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் தொடங்கப்பட்டது. தங்க அணிகலன், சுடுமண்ணாலான முத்திரை, இருபுறமும் உருவம் பதித்த செப்பு நாணயம் உள்ளிட்ட 3,000 வகையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2ம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த ஏப்.6ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தற்போது வரை சுடுமண்ணால் ஆன புகைபிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி உள்ளிட்ட 200 தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.