Monday, September 30, 2024
Home » செயற்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு அதிமுக எடுக்கும் எந்த முடிவும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும்: ஐகோர்ட் அமர்வு உத்தரவு

செயற்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு அதிமுக எடுக்கும் எந்த முடிவும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும்: ஐகோர்ட் அமர்வு உத்தரவு

by Karthik Yash

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.பிரபாகர் ஆகியோர் ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர்களில் ஒருவரின் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர், ‘கர்நாடகா தேர்தலில் போட்டியிடவும், வேட்பாளர்களை தேர்வு செய்யவும், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காகவும் செயற்குழு கூட்டப்படுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருடன் கலந்து பேசி பொதுக்குழுவில் முடிவு எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி அறிவிப்பில் அழைப்பிதழுடன் செயற்குழு கூட்டத்துக்கு வர வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் மனுதாரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி,எஸ்.வைத்தியநாதன், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி, கட்சியில் எந்த முடிவு எடுத்தாலும், அது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், செயற்குழுவில் என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண், கர்நாடகா மாநில தேர்தலில் பங்கேற்பது. கூட்டணி முடிவு செய்வது, தொகுதிகள், வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்ய போகிறோம் என்றார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 4 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கலாம். ஆனால், அவர் கட்சிக்குள் வந்து விட்டால், 4 என்பது 400 ஆக மாறும். ஏற்கனவே, இடைக்கால வழக்கு தனி நீதிபதி முன்பு நிலுவையில் இருந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் கேட்டு விட்டு பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்தனர். அதுபோல, ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எதிர் தரப்பினர் மேற்கொண்டுவருகிறார்கள் என்றார். அதற்கு எடப்பாடி தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, கட்சியின் நிலை குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதனால் செயற்குழு கூட்டம் கூட்டப்படுகிறது என்றார்.

அதற்கு நீதிபதிகள், தற்போது அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் தற்போதைய நிலை என்ன என்று கேட்டனர். அதற்கு மூத்த வக்கீல் மணிசங்கர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்று பதில் அளித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் சொந்த கட்சிக்கு எதிராக சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்’ என்றனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் 16ம் தேதி நடைபெற உள்ள அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு எதிராக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கு 20 மற்றும் 21ம் தேதிகளில் விசாரிக்கப்படும். வழக்கின் இறுதி விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை அதிமுகவில் எடுக்கப்படும் எந்த முடிவானாலும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என்று உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

two × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi