கருங்கல்: குமரி மாவட்டத்தில் இருக்கும் தன்னுடைய ஸ்கூட்டருக்கு சென்னையில் அபராதம் விதித்திருப்பதாக காவல்துறையினர் மெசேஜ் அனுப்பியதால் வாலிபர் அதிர்ச்சியடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் அஜி குமார். கட்டிட கான்ட்ராக்டர். இவர் நேற்று முன்தினம் தனது செல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, கடந்த 4ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து காவல்துறை (சென்னை டிராபிக் போலீஸ்) சார்பில் லிங்குடன் கூடிய ஒரு மெசேஜ் வந்தது. அந்த லிங்கை அவர் கிளிக் செய்து பார்த்தபோது, ‘நோ என்ட்ரியில் சென்றதற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு சென்னை ஆர்-3 அசோக்நகர் காவல்நிலையஎஸ்ஐ குமார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த லிங்கில் ஒரு நபர் பைக்குடன் இருப்பது போன்ற போட்டோவும் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த நபர் அஜிகுமார் இல்லை. மேலும் அஜி குமார் பயன்படுத்தும் வாகனம் ஸ்கூட்டர் வகையை சேர்ந்தது. ஆனால் அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது பைக். இதனால் அஜிகுமார் அதிர்ச்சியடைந்தார். அவரது வாகன பதிவு எண்ணை யாராவது போலியாக வேறு வாகனத்திற்கு பயன்படுத்தி வருகிறார்களா? அல்லது போலீசார் அபராதம் விதிக்கும்போது தவறான பதிவு எண்ணிற்கு அனுப்பப்பட்டதா? என்பது குறித்து தெரியவில்லை. இதுபற்றி அஜி குமார் குமரி காவல் துறையில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.