புதுடெல்லி: மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.திமுக ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நலப் பணியாளர்கள் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அப்போதைய அதிமுக அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதனை எதிர்த்து டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.மக்களை நலப் பணியாளர்களை அதிமுக அரசு நீக்கினாலும் மீண்டும் பணி வழங்கி மாத ஊதியம் ரூ. 7500 என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேற்கண்ட வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கிறோம். மாதம் ரூ.7,500 ஊதியத்தில் மக்கள் நலப் பணியாளர்களை வேலையில் அமர்த்திய தமிழக அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குகிறோம். 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலை வழங்கியது செல்லும். ஆட்சிகள் மாறினாலும் மக்கள் நலப் பணியாளர் நியமனம் தொடர வேண்டும்,” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.