சத்தியமங்கலம், ஏப்.7: சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் பங்குனி குண்டம் திருவிழாவையொட்டி புஷ்ப ரத ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவில் கோயில் முன்பு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதம் மாட்டு வண்டியில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் எழுந்தருளி அருள் பாலித்தார்.
செண்டை மேளம் முழங்க கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி புஷ்ப ரதத்தில் எழுந்தருளிய பண்ணாரி அம்மனை வழிபட்டனர். புஷ்பரத ஊர்வலம் கோயில் முன்பு தொடங்கி கோவிலை சுற்றி வலம் வந்தது. அப்போது பக்தர்கள் ரதத்துடன் ஊர்வலமாக கோயிலை சுற்றி வந்தனர். இதைத்தொடர்ந்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.