விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பள்ளியில் குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை இல்லாததால் கால்நடைகள் குடிக்கும் குட்டையில் பள்ளி மாணவர்கள் தண்ணீர் அருந்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருச்சுழி அருகே உள்ள ஆனைக்குளம் என்ற மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளின்றி பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் குடிநீர் வசதி இல்லாததால் அருகே உள்ள குட்டையில் மாணவர்கள் தண்ணீர் அருந்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி அண்மையில் பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாரத்திற்குள் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் உறுதி அளித்ததால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் ஒருவாரமாகிவிட்ட நிலையில் எந்த அடிப்படை வசதிகளையும் பள்ளி செய்துதரவில்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். …