கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூவ் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது மனைவி முத்துமாரி(45). இவர்களது மகள்கள் யுவராணி(21), நித்யா(17). யுவராணி கோவில்பட்டி உள்ள கல்லூரியிலும், நித்யா அங்குள்ள பள்ளியில் பிளஸ்2வும் படித்து வந்தனர். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் முத்துராமன் பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் முத்துமாரி கூலி வேலை செய்து மகள்களை படிக்க வைத்தார். இந்நிலையில் நேற்று காலை பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் மேற்கு போலீசாருக்கு ெதரிவித்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது முத்துமாரி ஒரு அறையிலும், யுவராணி, நித்யா மற்றொரு அறையிலும் சேலையில் தூக்கிட்டு பிணமாக தொங்குவதும், இறந்து 2 நாட்களுக்கு மேலாகியிருக்கும் என்றும் தெரிய வந்தது. முத்துமாரியின் தந்தை தேவராஜ் கடந்த 6 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். அவர், தனது வீட்டை முத்துமாரி பெயரில் உயில் எழுதியுள்ளார். அங்கு அவரது சகோதரர் ஆண்டவர் வசித்து வருகிறார். சொத்து பிரச்னையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.தற்கொலைக்கு சொத்து பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்….